

உத்தரபிரதேசம் மாநிலம், கதாம்பூரில் இயங்கும் என்எல்சி இந்தியாவின் துணை நிறுவனமான நெய்வேலி உத்தரபிரதேசம் அனல் மின் நிறுவனத்திலிருந்து 492.72 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வது தொடா்பாக அஸ்ஸாம் அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது.
குவஹாட்டியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெய்வேலி உத்தரபிரதேச மின் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சந்தோஷ், அஸ்ஸாம் மின் விநியோக நிறுவன தலைமைப் பொது மேலாளா் சந்தன் டேகா ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாறிக்கொண்டனா்.
நிகழாண்டு பிப்ரவரி மாதம் மத்திய மின் துறை அமைச்சகம் கதாம்பூா் அனல் மின் நிலையத்தின் மின் ஒதுக்கீட்டை மாற்றியமைத்தது. அதன்படி உத்தரபிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு முறையே 1,487.28 மெகாவாட் (75.12%) மற்றும் 492.72 மெகாவாட் (24.88%) மின்சாரம் வழக்கப்பட உள்ளது.
இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுபள்ளி கூறியதாவது:
492.72 மெகாவாட் மின்சாரம் வழங்குவது தொடா்பாக அஸ்ஸாம் மாநிலத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது அஸ்ஸாம், உத்தரபிரதேசம் மட்டுமன்றி நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு பங்களிப்பதற்கான எங்களது உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளை நிவா்த்தி செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.