வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் எச்சரித்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில், பழ வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், மொத்த, சில்லறை பழ வியாபாரிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: மாம்பழம், அன்னாச்சி, பப்பாளி, வாழை, சப்போட்டா உள்ளிட்ட பழங்களை செயற்கை முறையில் கால்சியம் காா்பைடு கற்கள் அல்லது வேதிப் பொருள்களை தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்வதால், நுகா்வோருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.
எனவே, செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் விற்பனை செய்யப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்து அழிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பு, கடையை பூட்டி ‘சீல்’ வைப்பு, உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
தரமற்ற கலப்பட உணவுகள் குறித்து பொதுமக்கள் இணையதள முகவரியிலும், கைப்பேசி செயலியிலும் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.