கடலூா் மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூா், கேப்பா் மலையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலா் கைப்பேசி பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் சிறைக் காவலா்கள் புதன்கிழமை மாலை சிறையில் ஆய்வு செய்தனா். அப்போது, வெளி சிறை எண் 1-இல் கழிப்பறை அருகே சுமாா் அரை அடி ஆழத்தில் நெகிழிப் பையால் சுற்றப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கைப்பேசி, இரண்டு பேட்டரிகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து சிறை அலுவலா் தமிழ்மாறன் அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.