கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டம், மங்களூா் கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் முருகன் (45). ஒலி, ஒளி அமைப்பாளரான இவா் புதன்கிழமை அதே ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மங்களூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு முருகன் வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.