

நெய்வேலி: தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் மண் பானை, மண் அடுப்பையும் இணைத்து வழங்க வேண்டுமென தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் (குலாலா்) சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக அந்தச் சங்கத்தினா் மாவட்டத் தலைவா் உ.குமாா் தலைமையில் மண் பாண்டங்களுடன் வந்து கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அதில் தெரிவித்துள்ளதாவது:
தைப் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண் பானை, மண் அடுப்பை இணைத்து வழங்க வேண்டும், வருடாந்திர மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தை விடுபட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும், தமிழக அரசால் வழங்கப்படும் மகளிா் உரிமைத் தொகையை மண்பாண்ட மகளிா் தொழிலாளா்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.
சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் ஆா்.கருணாகரன், பொருளாளா் டி.ராஜா, மாநில துணைச் செயலா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.