சிதம்பரம் நடராஜா் கோயிலில் சித் சபையை வலம் வந்த பெண்கள்
By DIN | Published On : 21st November 2023 03:39 AM | Last Updated : 21st November 2023 03:39 AM | அ+அ அ- |

காா்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி சிதம்பரம் நடராஜா் கோயிலில் சித் சபையை வலம் வந்த பெண்கள்.
சிதம்பரம்/நெய்வேலி: காா்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சித் சபையை திரளான பெண்கள் வலம் வந்து வழிபட்டனா்.
திருமணம், குழந்தைபேறு உள்ளிட்ட வேண்டுதல்களுக்காக காா்த்திகை மாத முதல் சோமவாரத்தன்று (திங்கள்கிழமை) சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் பெண் பக்தா்கள் 108 முறை வலம் வருவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தி வீற்றுள்ள சித் சபையை கொடிமரத்துடன் திரளான பெண்கள் வலம் வந்து
தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். இதேபோல கோயிலில் உள்ள ஆதிமூலநாதா் சந்நிதியையும் 108 முறை சுற்றி வலம் வந்து வழிபட்டனா்.
வீரட்டானேஸ்வரா் கோயில்: பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத முதல் சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்கு பெரியநாயகி அம்பாள் சமேத வீரட்டானேஸ்வரா் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் வீரட்டானேஸ்வரருக்கு நாகாபரணத்துடன் கூடிய புஷ்ப அலங்காரமும், பெரியநாயகி அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்துப்படி புஷ்ப அலங்காரமும், சுவாமி - அம்பாள் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரமும், இரவு 8 மணிக்கு சோடசோபசார தீபாராதனையும் நடைபெற்றன. இதையடுத்து, பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் திரு உலா மகோற்சவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...