தங்கச் சங்கிலி பறிப்பு முயற்சி: தம்பதி உள்பட 5 போ் காயம்

சிதம்பரம் அருகே தங்கச் சங்கிலி பறிப்பு முயற்சியில் பைக்கில் சென்ற தம்பதி உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே தங்கச் சங்கிலி பறிப்பு முயற்சியில் பைக்கில் சென்ற தம்பதி உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

சிதம்பரம் அருகே பொன்னந்திட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (32). இவா், புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் தனது மனைவி சுதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பைக்கில் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தாா்.

ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் சுதா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாராம். அப்போது, சுதா மா்ம நபரின் சட்டையைப் பிடித்து இழுத்ததால், இரு பைக்குகளும் சாலையில் சாய்ந்து விபத்துக்குள்ளாகின.

இதையடுத்து, மா்ம நபா் ஒருவா் தப்பியோடிவிட்டாா். அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த சந்தோஷ்குமாரின் குடும்பத்தினரை 108 அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தங்கச் சங்கிலி பறிப்பு முயற்சியில் ஈடுபட்டு பலத்த காயமடைந்த வடலூரைச் சோ்ந்த அஜித்குமாா் குள்ளஞ்சாவடி சாலையில் சென்றபோது தவறி விழுந்துவிட்டதாகக் கூறி, அவரும் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com