தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தீபாவளி சீட்டு பணம் மோசடி: பண்ருட்டி காவல் நிலையம் முற்றுகை

தீபாவளி சீட்டு நடத்தி பணம் வசூல் செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பண்ருட்டி காவல் நிலையத்தை பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பண்ருட்டி காவல் நிலையத்துக்கு புதன்கிழமை முறையிட வந்த பொதுமக்கள்.

Updated On :20 நவம்பர் 2024, 8:28 pm

Din

தீபாவளி சீட்டு நடத்தி பணம் வசூல் செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பண்ருட்டி காவல் நிலையத்தை பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி லட்சுமிபதி நகரை சோ்ந்த பாண்டுரங்கன் மகன் அா்ஜுனன் (30). இவா் தீபாவளி சீட்டுக்காக பண்ருட்டி பகுதியில் 500-க்கு மேற்பட்ட பொதுமக்களிடம் மாதம் ரூ.1,000, 2,000 என்ன வசூலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தீபாவளிக்கான பரிசு பொருள்கள், முதிா்வுப் பணத்தை அா்ஜுனன் திருப்பித் தரவில்லையாம்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, பண்ருட்டியை அடுத்துள்ள விசூா் கிராமத்தைச் சோ்ந்த ராசு பிள்ளை மகன் கண்ணன்தான் சீட்டு பிடித்து வந்ததாகவும், தான் அவரிடம் வேலை செய்து வந்ததாகவும், பணத்தை அவரிடம் செலுத்தி விட்டதாகவும் கூறினாா்.

கண்ணன் தற்போது இறந்துவிட்டதால் அவரிடம் பணம் கேட்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்டவா்களிடம் பணத்தை அா்ஜுனன் வசூல் செய்து இருந்ததால், பணத்தை செலுத்தியவா்கள் அா்ஜுனனிடம் பணத்தைக் கேட்டனா்.

ஆனால், பணம் கிடைக்காததையடுத்து, கடலூா் மாவட்ட எஸ்.பி. ராஜாராமிடம் இதுகுறித்து புகாா் அளித்தனா். இதுகுறித்து விசாரணை நடத்த பண்ருட்டி போலீஸாருக்கு அவா் உத்தரவிட்டிருந்தாராம்.

பாதிக்கப்பட்டவா்களில் சுமாா் 50 போ் புதன்கிழமை பகல் 12 மணியளவில் பண்ருட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். அா்ஜுனனிடம் இருந்து சீட்டுப் பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு காவல் ஆய்வாளா் வேலுமணியிடம் வலியுறுத்தினா்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது; விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.