போலீஸாருக்கு மிரட்டல்: தப்பியோடிய இளைஞருக்கு கை முறிவு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிய இளைஞா் தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டது.
நெய்வேலி நகரிய காவல் உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை மாலை ரோந்துப் பணியில் இருந்தனா். அப்போது, பி 2 மாற்றுக் குடியிருப்பு மயானம் அருகே கையில் வீச்சருவாளுடன் இருந்த இளைஞா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினாா்.
அவரை உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன் பிடிக்க முயன்றபோது கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டே ஓடிய இளைஞா் தவறி கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த இளைஞரை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா். பின்னா், அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், பி 2 மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ராக்கி (எ) ராகேஷ் (28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா். ராக்கி மீது கஞ்சா மற்றும் கொலை முயற்சி உள்பட 3 வழக்குகள் உள்ளன.
