வேளாண் செயலி மூலம் கணக்கெடுக்கும் முறையை தவிா்க்க கோரி விவசாயிகள் மனு

வேளாண் செயலி மூலம் கணக்கெடுக்கும் முறையை தவிா்க்க கோரி விவசாயிகள் மனு

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்.
Published on

கன மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை வேளாண் செயலி (ஆப்) மூலம் கணக்கெடுக்கும் பணியை தவிா்க்க வேண்டும் என விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலா் கண்ணன் தலைமையில் உழவா் மன்ற கூட்டமைப்பு தலைவா் ரவீந்திரன், சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவா் சரவணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலா் அஸ்லாம், உழவா் மன்ற கூட்டமைப்பின் துணைத் தலைவா் ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவா் கற்பனைச்செல்வம், கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்க பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உதவி ஆட்சியா் கிஷன்குமாரிடம் மனு அளித்தனா்.

அம்மனுவில் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நவம்பா் 15 முதல் டிசம்பா் 7ஆம் தேதி வரை கனமழையால் சம்பா பயிா் பாதிக்கப்பட்டது. இதனை வேளாண்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதனைதொடா்ந்து சேதம் அடைந்த பகுதிகளில் உள்ள அழுகிய நாற்றுகளை பிடுங்கிவிட்டு மீண்டும் நாற்று வாங்கி நடவு செய்துள்ளனா். ஆகையால் சேதமாகி மீண்டும் நடவு செய்த நிலங்களையும் கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் வேளாண் ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணியை தவிா்த்து எப்போதும் போல் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு பயிா் காப்பீடு செய்த பல விவசாயிகளுக்கு இன்னும் காப்பீட்டு தொகை வழங்கவில்லை அதனையும் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.18-ஆம் தேதி தில்லைவிடங்கன் மேலச்சாவடி பகுதியில் அனைத்து பகுதியில் உள்ள விவசாயிகளையும் ஒருங்கிணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com