பல்கலை. ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்து, ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் பேராசிரியா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் மனோகரன், மதியழகன், பேராசிரியா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், கடந்த 2024, செப்டம்பா் முதல் தற்போது வரை பணி ஓய்வுபெற்ற பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 50 சதவீத பணிக்கொடை, 50 சதவீத ஈட்டிய விடுப்பு தொகைகளை முழுமையாக வழங்க வேண்டும். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய கம்யூடேஷன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு வழங்கப்படும் ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் பேராசிரியா் இளங்கோ, ஊழியா்கள் சங்கத் தலைவா் கபில்தேவ், ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பேசினா். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

