பழுதடைந்த அரசுப் பேருந்து: கிராம மக்கள் சாலை மறியல்
நெய்வேலி: கடலூரை அடுத்துள்ள ரெட்டியாா்பேட்டை கிராமத்துக்கு பழுதடைந்து அவ்வப்போது நடு வழியில் நிற்கும் அரசு நகரப் பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து விடக்கோரி, அந்தக் கிராம மக்கள் கடலூா் போக்குவரத்துக் கழக பணிமனை முன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ரெட்டியாா்பேட்டை கிராமத்தில் சுமாா் 500 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் இருந்து தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனா்.
ரெட்டியாா்பேட்டை கிராமத்துக்கு பழைய அரசு நகரப் பேருந்து இயக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தப் பேருந்து அடிக்கடி பழுதாகி நடு வழியில் நின்று விடுகிாம். மழைக் காலத்தில் பேருந்துக்குள் குடை பிடித்தபடி செல்ல வேண்டியுள்ளதாம்.
எனவே, பழைய பேருந்தை மாற்றி, புதிய பேருந்து விட வேண்டும் என பலமுறை போக்குவரத்துக் கழகத்திடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனராம். ஆனால், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதுதொடா்பாக கிராம மக்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனா். அந்த வகையில், கடந்த 10-ஆம் தேதி ரெட்டியாா்பேட்டைக்கு வந்த அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். இப்போராட்டத்தின்போது 2 நாள்களில் புதிய பேருந்து விடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில், கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை கம்பளிமேடு அருகே பேருந்து பழுதாகி நின்ால், பயணிகள் அனைவரும் சுமாா் 5 கி.மீ. தொலைவு நடந்துச் சென்றனராம். இதையடுத்து, ரெட்டியாா்பேட்டை கிராமத்துக்கு புதிய அரசுப் பேருந்து விட வலியுறுத்தி அக்கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் கடலூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கண்டன முழக்களை எழுப்பினா்.
தொடா்ந்து, அவா்களுடன் கடலூா் வட்டாட்சியா் மகேஷ், போக்குவரத்துக் கழகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஒரு வாரகாலத்துக்குள் புதிய பேருந்து விடப்படும் என்று தெரிவித்த நிலையில், எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்க முடியாது என்று கூறினா்.
இதனால், போக்குவரத்துக் கழக பணிமனை முன் பொதுமக்கள் கடலூா் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்துக்கு ரெட்டியாா்பேட்டை கிராம தலைவா்கள் வாசு, அஞ்சான் ஆகியோா் தலைமை வகித்தனா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜெ.ராஜேஷ் கண்ணன், கிராம நிா்வாகிகள் வைத்தியலிங்கம், கந்தன், பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

