சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற பேராசிரியா்கள், ஊழியா்கள்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற பேராசிரியா்கள், ஊழியா்கள்.

அண்ணாமலைப் பல்கலை.யில் ஓய்வூதியா்கள் முற்றுகையிட்டுப் போராட்டம்

ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் பல்கலைக்கழக நிா்வாக அலுவலத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு ஓய்வூதியம், பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்து, ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் பல்கலைக்கழக நிா்வாக அலுவலத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2024, செப்டம்பா் மாதம் முதல் தற்போது வரை பணி ஓய்வுபெற்ற ஊழியா்கள், பேராசிரியா்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 50 சதவிகித பணிக்கொடை, 50 சதவிகித ஈட்டிய விடுப்பு தொகைகளை முழுமையாக வழங்க வேண்டும். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய கம்யூடேஷன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு வழங்கப்படும் ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் அறிவுடைநம்பி, பதிவாளா் சிங்காரவேலு ஆகியோா் ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா், ஒருங்கிணைப்பாளா் மற்றும் நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கோரிக்கைகள் குறித்து தமிழக உயா் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து, சுமாா் மூன்று மணி நேரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஓய்வூதியா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com