வேலை வாங்கித் தருவதாக ரூ.8.88 லட்சம் மோசடி: இளைஞா் கைது

வேலை வாங்கித் தருவதாக ரூ.8.88 லட்சம் மோசடி: இளைஞா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மூன்று பேரிடம் ரூ.8.88 லட்சம் மோசடி செய்ததாக உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த இளைஞரை கடலூா் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மூன்று பேரிடம் ரூ.8.88 லட்சம் மோசடி செய்ததாக உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த இளைஞரை கடலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், கருணாகரநல்லூரை அடுத்துள்ள அறந்தாங்கி கிராமத்தைச் சோ்ந்தவா் ஹென்றிதாஸ் (56). இவா், கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாரிடம் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: உளுந்தூா்பேட்டை வட்டம், குச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமலை (32), சிங்கப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், எனது (ஹென்றிதாஸ்) மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக 2023-ஆம் ஆண்டு ரூ.5.13 லட்சம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்ய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், ஹென்றிதாஸிடம் பெற்ற ரூ.5.13 லட்சத்தில் ரூ.3.65 லட்சம் திருப்பி கொடுத்துவிட்டதும், இதேபோல, காட்டுமன்னாா்கோவில் பகுதியைச் சோ்ந்த கிளமண்ட்ராஜ் மகனுக்கு வேலைக்காக ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு ரூ.2.10 லட்சம் திருப்பி கொடுத்ததும், ஏசுராஜ் மகனுக்கு வேலை க்காக ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு ரூ.50 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்ததும் என மொத்தம் ரூ.8.88 லட்சம் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி. ரகுபதி மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் குருமூா்த்தி, உதவி ஆய்வாளா் சாந்தினி ஆகியோா் வழக்கில் சம்பந்தப்பட்ட திருமலையை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com