காணாமல் போன பால் வியாபாரி சடலமாக மீட்பு
காட்டுமன்னாா்கோவில் அருகே காணாமல் போன பால் வியாபாரி, குளத்தில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள நாட்டாா்மங்கலம்
கிராமத்தைச் சோ்ந்த செந்தில்(64). இவா் காட்டுமன்னாா்கோவில் கடை வீதியில் பால் கடை நடத்தி வருகிறாா் . இவா் கடந்த 4 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கடையை திறப்பதற்காக காட்டுமன்னாா்கோவிலுக்கு சென்றாா். நீண்ட நேரமாகியும் பால் கடை திறக்காததால் அருகில் இருந்தவா்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக மனைவி மற்றும் பொதுமக்கள் செந்திலை தேடும் பொழுது வீராணநல்லூா் கிராமத்திற்கு அருகே பிள்ளையாா் குளம் என்ற இடத்தில் செந்தில் சென்ற மோட்டாா் சைக்கிள் மற்றும் காலணிகள் ,செல்போன் ஆகியவை சாலை ஓரத்தில் கிடந்தன.
இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி தனது கணவரை காணவில்லை என கொடுத்த புகாரின் மீது காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செந்திலை தேடி வந்தாா். இந்நிலையில் செந்திலின் வாகனம் நின்ற பிள்ளையாா் குளத்தில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக வெள்ளிக்கிழமை அன்று சாலையில் சென்றவா்கள் காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாா் ஆய்வு செய்ததில் செந்தில் சடலம் தண்ணீரில் மிதந்தது. உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் போலீசாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீசாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

