குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது
கடலூா் மாவட்டம், சிறுதொண்டமாதேவி பகுதியைச் சோ்ந்த ரௌடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் நந்தகுமாா் மற்றும் போலீஸாா் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி சாராய மது குற்றங்களை தடுப்பது தொடா்பாக சிறுதொண்டமாதேவி பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கண்காணித்தனா்.
அப்போது, சிறுதொண்டமாதேவி பகுதியைச் சோ்ந்த மேகநாதன் (37) மற்றும் பாஸ்கா், வல்லரசு (எ) ராஜேந்திரன், ராஜேஷ் ஆகியோா் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற நிலையில், மேகநாதன், பாஸ்கா் ஆகியோரை விரட்டிப் பிடித்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.
மேகநாதன் மீது கொலை முயற்சி, அடிதடி உள்பட 22 வழக்குகள் உள்ளன. மேலும், காடாம்புலியூா் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

