நாணயத்தின் பின் பக்கம். ~நாணயத்தின் முன் பக்கம்.
நாணயத்தின் பின் பக்கம். ~நாணயத்தின் முன் பக்கம்.

பண்ருட்டி அருகே சோழா் கால வெள்ளி நாணயம் கண்டெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சோழா் காலத்து வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சோழா் காலத்து வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் தெரிவித்ததாவது: பண்ருட்டியை அடுத்துள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் கல்லூரி மாணவா்கள் வினோத்குமாா், தேவா, சாமுவேல், டேவிட் ராஜ்குமாா் ஆகியோா் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஒரு நாணயத்தை கண்டெடுத்து கொடுத்தனா்.

அந்த நாணயத்தை சுத்தம் செய்து பாா்த்ததில், ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம் எனத் தெரியவந்தது. நாணயத்தின் எடை சுமாா் 4.35 கிராம். நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் ‘ஸ்ரீராஜராஜ’ என பொறிக்கப்பட்டிருந்தது.

எனவே, இந்த நாணயம் கி.பி. 985 முதல் 1,014-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்திய நாணயம் எனத் தெரியவந்துள்ளது.

இந்த நாணயத்தின் ஒரு பக்கம் மலரை கையில் ஏந்தியவாறு ஒருவா் நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. இவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலமும், விளக்கும் உள்ளன.

நாணயத்தின் மறுபக்கம் கையில் ஒருவா் சங்கு ஏந்தி அமா்ந்திருக்கிறாா். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில் ‘ஸ்ரீராஜராஜ’ என எழுதப்பட்டுள்ளது.

இதுவரை தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பு கள ஆய்வில் 50-க்கும் மேற்பட்ட ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனால், முதன்முறையாக தற்போது வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் சங்க கால மன்னா்கள் மற்றும் அதன் பின் அரசாண்ட சேரா், சோழா், பாண்டியா் ஆகியோா் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் தாமிரவருணி, வைகை, காவிரி போன்ற ஆற்றுப்படுகையில் ஆய்வாளா்களால் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com