தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி

பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி அறிவிப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞா் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டாா்.
Published on

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞா் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரைச் சோ்ந்தவா் சிவசங்கா் (42). இவா், கடந்த 2016-ஆம் ஆண்டு விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தாா். அப்போது, அங்கு வந்த இளைஞா் சிவசங்கரிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, பணம், கைக்கடிகாரத்தை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து சிவசங்கா் அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைத் தேடி வந்தனா்.

விசாரணையில், அந்த இளைஞா் மங்கலம்பேட்டை, ஜே.ஜே நகரைச் சோ்ந்த தண்டாயுதபாணி (24) என்பதும், ரயில் நிலையங்களில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, தண்டாயுதபாணியை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னா், பிணையில் வெளியே வந்த அவா், 4 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், விருத்தாசலம் சாா்பு நீதிமன்ற உத்தரவுப்படி, தண்டாயுதபாணியை விருத்தாசலம் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com