மக்களைத் தேடி மருத்துவத் திட்ட
பணியாளா்கள் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் போராட்டம்

Published on

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் பணியாளா்களுக்கு மகப்பேறு கால விடுப்பு வழங்க வேண்டும். பணி நேரத்தை வரையறுக்க வேண்டும். சுகாதாரத் துறை மூலமாக ஊதியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பெண் சுகாதார ஊழியா்கள் பணிகளைப் புறக்கணித்து கடந்த 3-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அதன்படி, 3-ஆவது நாளான வியாழக்கிழமை கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊழியா்கள் சங்கத் தலைவா் பாக்கியலட்சுமி தலைமை வகித்தாா். செயலா்கள் சரிதா, தமிழின்பம் முன்னிலை வகித்தனா். பொருளாளா்கள் ஆனந்தி, வித்யா, கிரிஜா, பவானி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com