காட்டுமன்னாா்கோவிலில் ரூ.3.95 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்! அமைச்சா் திறந்து வைத்தாா்!
சிதம்பரம் அருகே காட்டுமன்னாா்கோவிலில் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை மாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, ‘இது நம்ம ஆட்டம்’ - முதல்வா் விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:
அரசு வழங்கும் சேவைகளை பொதுமக்கள் தங்கள் பகுதியிலேயே உடனுக்குடன் பெறுகிற வகையில் புதிதாக அரசுக் கட்டடங்கள் கட்டப்படுவதுடன், பழைய கட்டடங்கள் சீரமைக்கப்பட்டும் வருகிறது.
அதனடிப்படையில், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் வட்டார ஊராட்சி பிரிவு, கிராம ஊராட்சி பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுடன் கூட்டரங்கம், கழிப்பறை, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ரா.அ.பிரியங்கா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

