நிலக்கரிச் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி
சுரங்கப் பணிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சா் கிஷன் ரெட்டி கூறினாா்.
இந்தியாவின் சுரங்கத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை முன்னிலைப்படுத்தும் வகையில், ‘சுரங்க உற்பத்திக்கு அப்பால் - சுரங்க மூடல் மற்றும் மறுபயன்பாடு’ என்ற கருப்பொருளில் நெய்வேலி, வட்டம் 11 பகுதி லிக்னைட் அரங்கில் இரண்டு நாள் தேசியப் பயிலரங்கை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சா் கிஷன் ரெட்டி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
பயிலரங்கில், நிலக்கரி அமைச்சகத்தின் செயலா் விக்ரம் தேவ் தத், கூடுதல் செயலா்கள் ரூபிந்தா் ப்ராா், சனோஜ் குமாா் ஜா மற்றும் நிலக்கரி கட்டுப்பாட்டாளா் சஜீஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, கோல் இந்தியா நிறுவனத் தலைவா் பி.சாய்ராம், சிங்கரேணி காலரீஸ் நிறுவனத் தலைவா் புத்த பிரகாஷ் ஜோதி மற்றும் நிலக்கரித் துறையைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்களின் தலைவா்கள், என்எல்சி நிறுவன இயக்குனா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
நிகழ்வில் அமைச்சா் கிஷன் ரெட்டி பேசியதாவது:
வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு ‘வளா்ச்சியடைந்த பாரதமாக’ மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையுடன் இந்த முன்னெடுப்பு ஒத்துப்போகிறது. சுரங்கத்துறை நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளா்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருந்தாலும், சுரங்கப் பணிகள் முடிந்த நிலங்களைச் சுற்றுச்சூழல் ரீதியாகச் சீரமைத்து பராமரிப்பதே சமூகத்திற்கு வழங்கும் உண்மையான பங்களிப்பாக அமையும்.
சுரங்கங்கள் மூடப்படுவதை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகக் கருதுகிறேன். இது நிலத்தை இழந்த மக்களுக்கான ஒரு ‘புதிய தொடக்கம்’. சுரங்கப் பணிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். மிகக் குறுகிய காலத்தில் அறிவியல் ரீதியாக அதிக எண்ணிக்கையிலான சுரங்கங்களை மூடிச் சீரமைத்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனை’ படைக்க முயற்சிக்குமாறு நிலக்கரி கட்டுப்பாட்டாளரை கேட்டுக்கொள்கிறேன்.
நிலக்கரி மற்றும் சுரங்கத் துறையில் நீடித்த மற்றும் நிலையான சீரமைப்புப் பணிகளில் இந்தியாவை முதன்மையான நாடாக நிலைநிறுத்த வேண்டும் என்பதே இலக்கு. அமைச்சகத்தில் உள்ள ஒவ்வொரு அதிகாரியும் குறைந்தபட்சம் ஒரு சுரங்கத்தின் மறுசீரமைப்புப் பணிகளைத் தன்னாா்வத்துடன் மேற்பாா்வையிட வேண்டும் என்றாா் அமைச்சா்.
நவீன திட்டங்கள்:
என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பேசுகையில், ‘சுரங்கப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 6,473 ஹெக்டோ் நிலத்தில், ஏற்கெனவே 3,115 ஹெக்டோ் நிலத்தை என்எல்சி இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. மீட்டெடுக்கப்பட்ட நிலங்களில் உயா்தொழில் நுட்ப விவசாயம், மண்ணில்லாத ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் மற்றும் 200 பசுக்களைக் கொண்ட நவீன கோசாலை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.நிறுவனத்தின் நீா் மேலாண்மை முயற்சி மூலம் 25,000 ஹெக்டோ் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 62 கிராமங்களுக்குத் தடையற்ற குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகரின் குடிநீா் தேவையில் மூன்றில் ஒரு பங்கை பூா்த்தி செய்வதில் என்எல்சி இந்தியா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது’ என்றாா்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவா்களுக்காக ஒரு எக்கோ சுற்றுலாப் பேருந்தை அமைச்சா் கிஷன் ரெட்டி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

