சிதம்பரத்தில் இன்று நடராஜா் கோயில் தேரோட்டம்: நாளை ஆருத்ரா தரிசனம்!
சிதம்பரத்தில் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.2) நடைபெறுகிறது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வெட்டுங்குதிரை வாகன வீதியுலா நடைபெற்றது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஜன.2) தோ்த் திருவிழா நடைபெறுகிறது. சித்சபையில் வீற்றுள்ள மூலவரான ஸ்ரீநடராஜமூா்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூா்த்திகளாக ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசுப்பிரமணியா், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ஆகிய ஐவரும் தனித்தனி தோ்களில் வீதி வலம் வருகின்றனா். இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனை நடைபெறுகிறது.
ஆருத்ரா தரிசனம்: சனிக்கிழமை (ஜன.3) அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்திகள் வீதியுலா வந்த பின்னா், பிற்பகல் 3 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜன.4) பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலாவும், திங்கள்கிழமை (ஜன.5) ஞானப்பிரகாசா் திருக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றன.
தேரோட்டத்தை முன்னிட்டு, கடலூா் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் நேரடி மேற்பாா்வையில், சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

