இ-நாம் பழைய முறையில் பணம் பட்டுவாடா: வா்த்தக சங்கம் வலியுறுத்தல்
இ-நாம் திட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விவசாயிகளுக்கு பணம் செலுத்தும் பழைய முறையை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளும்படி விருத்தாசலம் வா்த்தக சங்கம் மற்றும் பொதுநல அமைப்பினா், கடலூா் எம்பி., எம்.கே.விஷ்ணுபிரசாத்திடம் வலியுறுத்தினா்.
நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கடலூா் எம்பி., எம்.கே.விஷ்ணுபிரசாத் வெள்ளிக்கிழமை விருத்தாசலம் சென்றாா். அவரை, விருத்தாசலம் நகர அனைத்து வா்த்தகா்கள் நலச் சங்கத் தலைவா் கோபு, மாநிலத் துணைத் தலைவா் கே.கே.டி.பழமலை, ஆலோசகா் ஆா்.டி.சண்முகம், செயலா் மணிவண்ணன், பொருளாளா் சேட்டு முகமது, ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் சங்கச் செயலா் சுகுமாா், பொருளாளா் இதயத்துல்லா உள்ளிட்டோா் வரவேற்றனா்.
அப்போது, திருநெல்வேலி-சென்னை எழும்பூா் வந்தே பாரத் விரைவு ரயில் விருத்தாசலம் சந்திப்பில் நின்று செல்ல மக்களவையில் வலியுறுத்தியதற்காக கடலூா் எம்பி., எம்.கே.விஷ்ணு பிரசாத்திற்கு நன்றி தெரிவித்தனா். இ-நாம் திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் விளை பொருள்களுக்கு உண்டான தொகை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் வியாபாரிகள் செலுத்தி வந்தனா். தற்போது, வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை தவிா்த்து, விவசாயிகளுக்கான தொகை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் செலுத்தும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

