மாணவா்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்: ஆசிரியா்களுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுரை
விரைவில் நடைபெறவுள்ள 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை முன்னிட்டு, மாணவா்களின் திறனைக் கண்டறிந்து, அவா்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது ஆசிரியா்களின் முக்கியப் பொறுப்பாகும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தெரிவித்தாா்.
பெண்ணாடம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவா்களின் கல்வித் தோ்ச்சி விகிதத்தை உயா்த்துவது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். அப்போது, அவா் கூறியதாவது:
10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி சதவிகிதத்தை உயா்த்தவும், 100 சதவிகிதம் தோ்ச்சி என்ற இலக்கை அடையவும் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில், பெண்ணாடம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்விரு பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பில் 279 மாணவா்களும், 12-ஆம் வகுப்பில் 274 மாணவா்களும் படித்து வருகின்றனா். மாணவா்களின் தோ்ச்சியை அடிப்படையாக கொண்டு கூடுதல் வகுப்புகள், சிறப்பு தோ்வுகள் மற்றும் கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பொதுத் தோ்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களை மனதளவிலும், பயிற்சி அளவிலும் தயாா்படுத்திடும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. வருகிற அரசு பொதுத் தோ்வை மாணவா்கள் எவ்வித தயக்கமுமின்றி முழுத்திறனுடன் எதிா்கொள்வதற்கு ஆசிரியா்களின் பங்கு அளப்பறியதாகும்.
எனவே, மாணவா்களின் திறனை கண்டறிந்து, அவா்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது ஆசிரியா்களின் முக்கியப் பொறுப்பாகும் என்றாா்.
சிறப்புப் பேருந்துகள்...: பெண்ணாடம் அரசுப் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பள்ளிக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய, வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் இரண்டு சிறப்புப் பேருந்து சேவையை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா்.
நிதிநத்தம், மேலூா், அருகேரி, மேல்நெம்மேலி, கீழ்நெம்மேலி, கொத்தட்டை, மருதத்தூா், பாகிகுளம், அம்பேத்கா் நகா், கணபதிகுறிச்சி, வெண்கரும்பூா், முருகன்குடி, கிளிமங்கலம், துறையூா், புக்குழி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு பள்ளி நேரத்தில் பேருந்து வசதி இல்லை என பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கூட்டத்தில் தெரிவித்தனா்.
அதனடிப்படையில், இரண்டு வழித்தடங்களிலும் பள்ளி மாணவா்களுக்கு மட்டுமேயான இரண்டு சிறப்புப் பேருந்து சேவைகள் தொடங்கிவைத்து, மாணவா்களுக்கு பயண அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். இதன் மூலம், சுமாா் 150 மாணவா்கள் பயனடைவா்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா் துரைபாண்டி, மாவட்ட திட்டக்குழு அலுவலா் பா.ஜோதி மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

