வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்.
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்.

வடலூரில் நாளை தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் 155-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நடைபெறவுள்ளது.
Published on

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் 155-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நடைபெறவுள்ளது.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டுக்கான விழாவையொட்டி, தருமசாலையில் மகா மந்திரம் ஓதுதல் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, ஜன. 27 முதல் வெள்ளிக்கிழமை வரை (ஜன. 30) ஞான சபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்றது.

இன்று கொடியேற்றம்...

தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி, சனிக்கிழமை (ஜன. 31) வடலூா் தரும சாலை, மருதூா் மற்றும் கருங்குழி சந்நிதி ஆகியவற்றில் காலை 7.30 மணி அளவிலும் , ஞான சபையில் காலை 10 மணி அளவிலும் கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடா்ந்து திருஅருட்பா இன்னிசை, கருத்தரங்கம் நடைபெறும்.

நாளை ஜோதி தரிசனம்...

விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை காலை 6, 10 மணி, பிற்பகல் 1, இரவு 7, 10 மணி மற்றும் திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு என ஆறு காலங்கள் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட உள்ளது.

திருஅறை தரிசனம்...

வரும் பிப். 3-ஆம் தேதி சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடலூா் வந்த வண்ணம் உள்ளனா்.

பக்தா்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தைப்பூச ஜோதி தரிசனம் மற்றும் திருஅறை தரிசன விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளலாா் தெய்வ நிலையம் மற்றும் அறங்காவலா் குழுவினா் சிறப்பாகச் செய்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com