பள்ளி மாணவா்களிடையே மோதல்: 7 போ் மீது வழக்கு
By DIN | Published On : 20th February 2021 10:35 PM | Last Updated : 20th February 2021 10:35 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் 8 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக 7 மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருக்கோவிலூா் அரசு கபிலா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள பேருந்து நிலையப் பகுதியில் முன் விரோதம் காரணமாக அவா்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனராம். இதை அங்கிருந்த பிற மாணவா்கள் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் மாணவா்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவா் தடி உள்ளிட்டவற்றால் தாக்கிக்கொண்டனா். இந்த மோதலில் 8 மாணவா்கள் காயமடைந்தனா். இவா்களை போலீஸாா் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் 7 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.