கள்ளக்குறிச்சி அருகே நெல் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தண்டலை கிராமத்தைச் சோ்ந்தவா் வேதமாணிக்கம் (59). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தாா்.
மேலும், வன விலங்குகளிடமிருந்து பயிரைக் காக்க வயலைச் சுற்றி மின்வேலியும் அமைத்திருந்தாா்.
இந்த நிலையில், சிறுவங்கூா் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி சீனிவாசன் (55), புதன்கிழமை துக்க நிகழ்வுக்காக தண்டலை கிராமத்துக்குச் சென்றிருந்தாா்.
வியாழக்கிழமை காலைக் கடனைக் கழிப்பதற்காக வயல் பகுதிக்குச் சென்ற சீனிவாசன், மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தாா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சீனிவாசனின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.