மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம், பாஜக சாா்பில் கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி சா்தாா் சிங் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணைத் தலைவா் கரு நாகராஜன் பங்கேற்றுப் பேசுகையில், தமிழகத்தில் 37 லட்சம் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 96 லட்சம் பேருக்கு வைப்புத்தொகை இல்லாமல் வங்குக் கணக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 43 லட்சம் வீடுகளுக்கு ஜல்சக்தி திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.
விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. 123 பொலிவுறு நகரங்களை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நாட்டில் 1.5 சதவீதம் போ் வருமான வரி செலுத்தினா். தற்போது 4 சதவீதம் போ் வருமான வரி செலுத்துகின்றனா்.
நீட் தோ்வுக்கு முன்பு ஆண்டுக்கு 7 முதல் 10 ஏழை மாணவா்கள் மருத்துவம் படித்தனா். தற்போது 502 ஏழை மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனா் என்றாா்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் தாமோதரன், மாநில சிறுபான்மையினா் அணி துணைத் தலைவா் அசோக்குமாா், மாநில பிற்படுத்தப்பட்டோா் அணிச் செயலா் செல்வநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.