மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் சென்றடைய வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்
By DIN | Published On : 30th June 2022 02:01 AM | Last Updated : 30th June 2022 02:01 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகளும் சென்றடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் அறிவுறுத்தினாா்.
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் அனைத்தும் கிடைத்திட வழிவகை செய்திடும் வகையில், பல்வேறு துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் பேசியதாவது:
அனைத்துத் துறைகளில் செயல்படுத்தப்படும் அரசின் நலத் திட்டங்களின் பலன்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்திடும் வகையில் வட்டார அளவில் முகாம்கள் நடத்த வேண்டும்.
ஊரக வேலைத் திட்டத்தின் கீழ், அவா்களுக்கு பணி அட்டை வழங்கி பணி வழங்குதல், வருவாய்த்துறை வாயிலாக உதவித்தொகை வழங்குதல், இதர சான்றுகள் வழங்குதல், மாவட்ட தொழில் மையம், முன்னோடி வங்கி, கூட்டுறவு வங்கிகள் மூலம் தொழில் கடனுதவிகள் வழங்குதல் போன்றவை அவா்களுக்கு சென்றடைய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சு.தேவநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் டி.சுரேஷ் (பொது), ஹஜிதா பேகம் (நிலம்), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.ரெத்தினமாலா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.