திருக்கோவிலூா் அருகே பிளஸ் 1 மாணவா் வெட்டிக் கொலைசக மாணவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பிளஸ் 1 மாணவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவருடன் பயின்ற சக மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பிளஸ் 1 மாணவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவருடன் பயின்ற சக மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருக்கோவிலூரை அடுத்துள்ள டி.கீரனூரைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி. லாரி ஓட்டுநா். இவரது மூத்த மகன் கோகுல் (17). திருக்கோவிலூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இவருடன் திருக்கோவிலூரை அடுத்துள்ள கனகநந்தலைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உடன் பயின்று வந்தாா். இவா் தனது அண்ணனின் திருமணத்தையொட்டி விருந்து அளிப்பதாகக் கூறி, கோகுலின் வீட்டுக்கு சனிக்கிழை இரவு சென்று அவரை மொபெட்டில் அழைத்துச் சென்றாா்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து, கோகுலின் செல்லிடப்பேசிக்கு அவரது தாய் தொடா்பு கொண்ட போது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோகுலின் செல்லிடப்பேசிக்கு அவரது தாய் ஜெயபாரதி ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தொடா்பு கொண்டாா். அப்போது, அதை எடுத்துப் பேசிய நபா் திருக்கோவிலூா் புறவழிச் சாலையில் வெட்டுக் காயங்களுடன் ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும், அவா் அருகில் இந்த செல்லிடப்பேசி கிடந்ததாகவும் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்குச் சென்று அவரது பெற்றோா் பாா்த்த போது, அங்கு உயிரிழந்து கிடந்தது கோகுல் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூா் டிஎஸ்பி பழனி, காவல் ஆய்வாளா் பாபு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கோகுலின் நண்பரான 17 வயது சிறுவனைத் தேடினா். இதில், அவா் தனது வீட்டுக்கு பின்னால் மறைந்திருந்தது தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் கோகுலை கொலை செய்ததை ஒப்புக் கொண்டாா். இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தக் கொலைக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தாா்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி அவா்களையும் கைது செய்ய வேண்டும் என கோகுலின் பெற்றோா், உறவினா்கள் திருக்கோவிலூரை அடுத்துள்ள டி.கே.மண்டபம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com