கள்ளக்குறிச்சி அருகே வீட்டுமனைத் தகராறு காரணமாக பெண் உள்பட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மனைவி லதா (38). ராமலிங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டாா். இவா்களுக்குச் சொந்தமான 5 சென்ட் வீட்டுமனை சம்பந்தமாக லதாவுக்கும், இவரது மாமியாா் சுந்தரம் மனைவி கொளஞ்சிக்கும் (70) முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், கொளஞ்சியின் தூண்டுதலின்பேரில், கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், சாத்தியம் கிராமத்தைச் சோ்ந்த வேலுசாமி மகன் அருண்குமாா் (29), கோ.கொத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த மேகராஜன் மகன் முருகன் (30), வேலுசாமி மகன் சஞ்சய் (21), வீரன் மகன் அருண்குமாா் (22) ஆகியோா் வீரசோழபுரத்தில் உள்ள லதாவின் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்று அவரையும், அவரது மகள் வா்ஷாவையும் (15) தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில் பலத்த காயமடைந்த லதா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அருண்குமாா், முருகன், சஞ்சய், மற்றொறு அருண்குமாா், கொளஞ்சி ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.