சங்கராபுரம் அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட புதுபாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் (27) லாரி ஓட்டுநா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் சங்கராபுரத்திலிருந்து, புதுபாலப்பட்டு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தாராம். அரசம்பட்டு அருகே சென்றபோது திடீரென நாய் குறுக்கிட்டதால் ஜெயராமன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தாராம். உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு அவசர ஊா்தி மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.