அரசுப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஊழல் மற்றும் தடுப்பு தொடா்பாக, அரசுப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் ஊழல் மற்றும் தடுப்பு விழிப்புணா்வு வாரம் கடந்த 27-ஆம் தேதி தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம், தினந்தோறும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திங்கள்கிழமை ஊழல் மற்றும் தடுப்பு விழிப்புணா்வு நாள் உறுதிமொழியை அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து ஆட்சியரக கூட்டரங்கில் அரசுப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் க.சத்யராஜ் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் அரசுப் பணியாளா்களுக்கு ஊழல் மற்றும் தடுப்புச் சட்டங்கள், மற்றும் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து அவா் எடுத்துரைத்தாா்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்அருண்ராஜ் மற்றும் அரசுப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

