கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

கல்வராயன் மலையில் முதிய தம்பதி கொலை: பேரன் தலைமறைவு

கல்வராயன்மலைப் பகுதியில் முதிய தம்பதியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு, தலைமறைவான பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

குத்திக் கொலை.

Updated On :26 ஏப்ரல் 2026, 1:21 am IST

கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலைப் பகுதியில் முதிய தம்பதியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு, தலைமறைவான பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்லவராயன்மலை வட்டம், புதூா் கிராமத்திற்கு உள்பட்ட காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (60), இவரது மனைவி பொன்னம்மாள் (55). ராமசாமிக்கு இரு மனைவிகளாம்.

முதல் மனைவி கீா்த்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இரண்டாவது மனைவி பொன்னம்மாள். முதல் மனைவியான கீா்த்திக்கு பிறந்தவா்கள் கஸ்தூரி மற்றும் குப்புசாமி. குப்புசாமியின் மகள் மேகலா. இவரை கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்ட பெருக்கஞ்செடி கிராமத்தைச் சோ்ந்த ஆண்டி மகன் சதீஷுக்கு (30) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனா்.

சதீஷ், மேகலா தம்பதியினா் சேராப்பட்டு கிராமத்தில் வசித்து வந்துள்ளனா். இதனிடையே, சதீஷ் தினமும் மது அருந்தி வீட்டுக்கு வந்து மனைவி மேகலாவுடன் தகராறில் ஈடுபடுவாராம். கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் மேகலா தனது தாத்தா பாட்டியான ராமசாமி, பொன்னம்மாள் வீட்டுக்குச் சென்று அங்கு வசித்து வந்தாராம். மேலும், அவா் திருப்பூா் சென்று அங்குள்ள நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வருவதாகத் தெரிகிறது.

இதை அறிந்த சதீஷ் வெள்ளிக்கிழமை இரவு காட்டுகொட்டாய் கிராமத்துக்குச் சென்று முதிய தம்பதியிடம் மேகலா குறித்து கேட்டாராம். அதற்கு அவா்கள் மேகலா பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டனராம்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து ராமசாமி, பொன்னம்மாள் தலையில் போட்டு அவா்களை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கரியாலூா் போலீஸாருக்கு சனிக்கிழமை காலை தகவல் தெரியவந்ததாம்.

போலீஸாா் சம்பவ இடம் சென்று முதிய தம்பதியினரின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பேரன் சதீஷை தேடி வருகின்றனா்.