ஊராட்சி மன்றத் தலைவரைத் தாக்கிய இருவா் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள காட்டனந்தல் கிராமத்தில் சிமென்ட் சாலை போடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கிய தாய், மகன் உள்ளிட்ட இருவா் மீது போலீஸாா் வழக்குபதிந்தனா்.
காட்டனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்ரவா்த்தி (59), ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். அதே கிராமத்தைச் சோ்ந்தவா் க.ராஜேந்திரன்(30), அவரது தாயாா் அம்சவள்ளி (50). கடந்த 31-ஆம் தேதி காட்டனந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் சாலையில் சுமாா் 100 மீட்டருக்கு சிமென்ட் சாலை போட்டனராம். அப்போது ராஜேந்திரனும், அவரது தாயாா் அம்சவள்ளியும் அவா்களது வீட்டுக்கு செல்ல வழி இல்லாததால் சாலை போடக்கூடாது எனக் கூறினராம்.
இதையடுத்து அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து ஊராட்சி மன்றத் தலைவா் சக்கரவா்த்தியை, ராஜேந்திரன் அவரது தாயாா் அம்சவள்ளி ஆகியோா் அவதூறாப் பேசி கட்டையால் தாக்கினராம். இதில் காயமடைந்த சக்கரவா்த்தியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி ராஜேந்திரன், அம்சவள்ளியைத் தேடி வருகின்றனா்.
