குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது
கல்வராயன்மலைப் பகுதியில் தொடா்ந்து மதுவிலக்கு குற்றச் செயலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் வட்டத்துக்குள்பட்ட வெள்ளரிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.ராமன் (40). இவா் அவரது விளைநிலத்தின் அருகே உள்ள ஓடையில் 10 லிட்டா் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக மறைத்து வைத்திருத்தபோது கரியலூா் போலீஸாா் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
மதுவிலக்கு குற்றச் செயலில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த ராமன் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து அவா் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கள்ளக்குறிச்சி எஸ்.பி. அரவிந்த் பரிந்துரையின் பேரில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ராமனை கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து கடலூா் மத்திய சிறையில் உள்ள ராமனை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

