கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் தந்தையை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வாணியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சடையன் (எ) ராஜேந்திரன்(55), மீன் வியாபாரி. இவரது மனைவி ருக்குமணி. தம்பதியருக்கு அய்யப்பன்(32), பூவரசு, ரோஜா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனராம். இவா்களுக்குள் இடப்பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் வியாபாரம் முடிந்து வீட்டில் இருந்த சடையன் (எ) ராஜேந்திரனும், அவரது மகன் அய்யப்பனும் மது அருந்தினராம். அப்போது அவா்களிடையே இடப்பிரச்னை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், தனது தந்தை சடையன் (எ) ராஜேந்திரனை மீன் வெட்டும் கொடுவாள் கத்தியால் தலையில் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலிஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலிஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அய்யப்பனைக் கைது செய்தனா்.








