நாடகப் போட்டி: ஆக. 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 04th August 2019 01:29 AM | Last Updated : 04th August 2019 01:29 AM | அ+அ அ- |

புதுவையில் ஆசிரியர் கலைக்குழு சார்பில் நடத்தப்படவுள்ள நாடகப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை ஆசிரியர் கலைக் குழுச் செயலர் முருகேசன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாடகக் கலை வளர்ச்சி கருதி, ஆசிரியர் கலைக் குழு கடந்த 16 ஆண்டுகளாக நாடகப் போட்டியை நடத்தி, கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், நிகழாண்டும் நாடகப் போட்டியை அறிவித்துள்ளது.
ஆசிரியர் கலைக் குழுவின் 31-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, செப். 16 முதல் 27-ஆம் தேதி வரை புதுச்சேரி, தட்டாஞ்சாவடி அய்யனார் கோயில் திடலில் நடைபெற இருக்கும் நாடகப் போட்டிக்கு, நாடகக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் வெற்றி பெறும் குழுக்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ. 5 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படும். பரிசு பெறும் மூன்று குழுக்களுக்கு சுழல் கேடயமும் வழங்கப்படும். ரொக்கப் பரிசுகள் தவிர சிறந்த கதை, வசனம், காட்சி அமைப்பு, ஒப்பனை, கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை, நடிகை, குழந்தை நட்சத்திரம், இசை ஆகிய பிரிவுகளில் தலா மூவருக்கு நினைவுப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மேலும், ஒவ்வொரு குழுவிலும் பத்து பேருக்கு நினைவுப் பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் படிவத்தை "ஆசிரியர் கலைக் குழு, எண். 32, பத்தாவது குறுக்குத் தெரு, அண்ணா நகர், புதுச்சேரி 605 005' என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 94432 57989 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆக. 25-ஆம் தேதிக்குள் வந்து
சேர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.