அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்பட 5 பேருக்கு புதுவை பேரவையில் இரங்கல்
By DIN | Published On : 28th August 2019 08:49 AM | Last Updated : 28th August 2019 08:49 AM | அ+அ அ- |

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்பட 5 பேருக்கு புதுவை சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புதுவை சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. பேரவை நடவடிக்கைகளை தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து திருக்குறள் வாசித்து தொடக்கிவைத்தார்.
முதல் நடவடிக்கையாக, மறைந்த கோவா முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெயபால் ரெட்டி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, பிகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். மறைந்த தலைவர்களுக்கு முதல்வர் வே.நாராயணசாமி புகழாரம் சூட்டினார்.