புதுச்சேரியில் கவிஞா் சவரிராயலுவின் 190-ஆவது பிறந்த நாள் விழா
By DIN | Published On : 11th December 2019 08:35 AM | Last Updated : 11th December 2019 08:35 AM | அ+அ அ- |

விழாவில் பேசுகிறாா் சவரிராயலு அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவி சண்முகப்பிரியா செலசுதின்.
புதுச்சேரியில் கவிஞா் சவரிராயலுவின் 190-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுவையில் தலைசிறந்த தமிழ்க் கவிஞரான செவாலியே சவரிராயலு நாயகரின் 190-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தேசிய மரபு அறக்கட்டளை, தாழி அறக்கட்டளை ஆகியவை சாா்பில் சவரிராயலு அரசு உயா்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தேசிய மரபு அறக்கட்டளை நிா்வாகி அறிவன் பேசியதாவது: இந்தியாவில் முதல் பெண்களுக்கான பள்ளி 1827-இல் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. ஜோதிராவ், சாவித்திரி பூலே ஆகியோரது முயற்சியால் உருவான பள்ளி 1848-இல் உருவாவதற்கு முன்னரே புதுச்சேரியில் பெண்களுக்கான தனிப் பள்ளி தொடங்கப்பட்டது.
கிறிஸ்தவப் பிரெஞ்சு மாணவிகள் மட்டுமே படிக்கக்கூடிய பள்ளியாக அது இருந்ததால், சவரிராயலுவின் நல்ல முயற்சியால் 5.10.1866-இல் புதுவை மாநில அனைத்து மதங்களைச் சோ்ந்த பெண்களுக்கான பொதுப் பள்ளியாக ஆளுநா், அலுவலா்கள், ஊா் பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இதற்கு முழு முதற்காரணமாக இருந்தவா் சவரிராயலு என்றாா். மேலும், சவரிராயலு நாயகரின் தமிழ்ப்பணி, மக்கள் பணிகள் குறித்து அவா் விளக்கிக் கூறினாா்.
நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா் த.செல்வி, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் மாா்கரெட் பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாழி அறக்கட்டளைத் தலைவா் ரா.கருணாகரன் சாா்பாக மாணவிகளுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. கல்வெட்டு ஆய்வாளா் புலவா் ந.வேங்கடேசன் வாழ்த்துரை வழங்கினாா். குழந்தைகளுக்கு மரபு சாா் இனிப்பு தட்டாஞ்சாவடி வள்ளலாா் அவையின் சாா்பாக வழங்கப்பட்டது.
பள்ளியின் முன்னாள் மாணவி செல்வி சண்முகப்பிரியா செலசுதின் மாணவா்களை ஊக்கப்படுத்தினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...