மயக்க மருந்தை உடலில் செலுத்தி பெண் மருத்துவர் தற்கொலை
By DIN | Published On : 30th March 2019 08:49 AM | Last Updated : 30th March 2019 08:49 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் போட்டுக் கொண்டு பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியைச் சேர்ந்தவர் மணி. இவர், சென்னையில் மத்திய அரசு நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி லட்சுமி. இவர், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். தம்பதியின் 2-ஆவது மகள் ராதிகா (24). இவர், வானூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார்.
இதனிடையே, ராதிகா மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக வில்லியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறப்பு நிபுணரிடம் சிகிச்சை பெற்று வந்தாராம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த ராதிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக ஊசியில் செலுத்தி போட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மயங்கி விழுந்தாராம்.
பணி முடிந்து மாலை வீடு திரும்பிய அவரது தாய் காயத்ரி லட்சுமி, வீட்டில் மகள் ராதிகா மயங்கிக் கிடப்பதைக் கண்டு, உடனடியாக அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...