இருவேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி
By DIN | Published On : 05th May 2019 05:28 AM | Last Updated : 05th May 2019 05:28 AM | அ+அ அ- |

இருவேறு சாலை விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
புதுவை மாநிலம், பாகூர் அருகே இரண்டாயிரம்விலாகம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (19). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு, பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் மணிமாறன். கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரும் மோட்டார் பைக்கில் பாகூரில் இருந்து வில்லியனூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
பாகூர் ஏரிக்கரை அருகே வந்த போது, எதிரே வந்த வேன் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து அங்கு வந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸார், தினேஷ்குமாரின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து: பாகூர் அருகே மூர்த்திக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் செல்வம் (32). அந்தப் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். வெள்ளிக்கிழமை இரவு கடையில் இருந்து வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மணப்பட்டு சாலையில் தனியார் அரிசி ஆலை அருகே சென்ற போது, மணப்பட்டு சித்திரவேல் ஓட்டி வந்த மோட்டார் பைக், செல்வம் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் இறந்தார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...