தம்பி கொலை வழக்கில் அண்ணன் கைது
By DIN | Published On : 05th May 2019 01:34 AM | Last Updated : 05th May 2019 01:34 AM | அ+அ அ- |

புதுவை மாநிலம், திருக்கனூரில் தம்பி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அவரது அண்ணனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருக்கனூர் காந்தி நகர் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன்கள் விஜயதாஸ் (36), விமல்ராஜ் (33). இவர்களில் ஓட்டுநரான விமலுக்கு சத்தியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், மதுப் பழக்கத்துக்கு அடிமையான விமல்ராஜ், அரசு சுகாதாரத் துறையில் வேலை செய்து வரும் தனது தாய் விஜயாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இதேபோல, வியாழக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த அவர், தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்தாராம். அப்போது வீட்டில் இருந்த விஜயதாஸ், தம்பி விமல்ராஜை தட்டிக் கேட்டாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து விமல்ராஜை தாக்கியதாக் கூறப்படுகிறது. இதையடுத்து, விஜயதாஸ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மயக்கமடைந்த விமல்ராஜ் வெள்ளிக்கிழமை காலை பார்த்த போது, இறந்து கிடந்தாராம். இதுகுறித்து திருக்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய விஜயதாûஸ தேடி வந்தனர்.
இந்த நிலையில், திருக்கனூர் அருகே ஸ்ரீராம் நகரில் பதுங்கி இருந்த அவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து, அவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...