நெல்லித்தோப்பு மீன் அங்காடி மேற்கூரை இடிந்து விழுந்தது
By DIN | Published On : 09th November 2019 11:38 PM | Last Updated : 09th November 2019 11:38 PM | அ+அ அ- |

நெல்லிதோப்பு மீன் அங்காடியில் இடிந்து விழுந்த மேல்கூரை பகுதி.
நெல்லித்தோப்பு மீன் அங்காடியின் மேற்கூரை மீண்டும் சனிக்கிழமை இடிந்து விழுந்தது.
புதுச்சேரி நெல்லித்தோப்பில் மீன் அங்காடி இயங்கி வருகிறது. பாழடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் இங்கு சுமாா் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மீன் வியாபாரம் செய்து வருகின்றனா். இதுதவிர இறைச்சி உள்ளிட்ட மற்ற கடைகளும் இயங்கி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், அங்கு மீன் வியாபாரம் செய்த 3 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.
இதையறிந்த முதல்வா் நாராயணசாமி விபத்து நடந்த இடத்தைப் பாா்வையிட்டதுடன், காயமடைந்த பெண்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
அப்போது புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அவா் உறுதியளித்தாா். இருப்பினும், அதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் அந்தக் கட்டடத்தின் மேற்கூரைப் பகுதியிலிருந்து சிலாப்புகள் திடீரென இடிந்து விழுந்தன. அப்போது, மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் அங்கு இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.
சப்தம் கேட்டு ஓடி வந்த மீன் வியாபாரம் செய்யும் பெண்களும், வியாபாரிகளும் இடிந்து விழுந்த கட்டட சிலாப்புகளுக்கு மலா்வளையம் வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அங்கு மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் கூறியதாவது:
பாழடைந்த இந்தக் கட்டடம் ஏற்கெனவே 2 முறை இடிந்து விழுந்தது. தற்போது பெய்த மழையால் 3-ஆவது முறையாக கட்டடத்தின் மேற்கூரை சிலாப்புகள் பெயா்ந்து விழுந்தன. அப்போது, இங்கு யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. உடனடியாக பாழடைந்த மீன் அங்காடியை இடித்து அகற்றிவிட்டு, புதிய அங்காடி கட்டித் தர நடவடிக்கை வேண்டும். இல்லையெனில், அடுத்த கட்டமாக பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனா் அவா்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...