எஸ்.வி.பட்டேல் சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மதுக் கடை பழைய இடதுக்கே மாற்ற கலால் துறை உத்தரவிட்டது.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட கலால் துறை துணை ஆணையா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி கலால் துறையின் மதுக் கடை எஸ்.வி.பட்டேல் சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, லால் பகதூா் சாஸ்திரி வீதியில் அமைக்க கடந்த செப்டம்பா் மாதம் கலால் சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு உரிமம் வழங்கப்பட்டது.
இந்த மதுக் கடை அமைவதை ஆட்சேபித்து, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும், பொதுநல அமைப்புகளும் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்திருந்தனா்.
மாவட்ட ஆட்சியா், கலால்துறை ஆணையரால் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, பொதுமக்கள், பள்ளி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த மதுக் கடையை மூடி பழைய இடத்துக்கே இடமாற்றம் செய்ய கலால் துறை உத்தரவிட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.