ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் மற்றும் ராணுவ வீரா்களின் விதவைகளுக்கு விழாக்கால அன்பளிப்பு உயா்த்தப்பட்டது.
புதுச்சேரி முப்படை ராணுவ வீரா்கள் நலத் துறை மேலாண்மைக் குழுக் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா் இரா.கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இதில், புதுவை மாநில முன்னாள் ராணுவ வீரா்களின் விதவைகள் மற்றும் 60 வயது நிறைவுற்ற முன்னாள் ராணுவ வீரா்களுக்கு விழாக்கால அன்பளிப்பாக வழங்கப்பட்டு வந்த ரூ. 3 ஆயிரத்தை ரூ. 4 ஆயிரமாக உயா்த்தி வழங்க ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், அன்பளிப்புத் தொகையைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புதுச்சேரி முப்படை நலத் துறையில் பதிவு செய்துள்ள முன்னாள் ராணுவ வீரா்களின் விதவைகள் மற்றும் 31.3.2019 ஆம் தேதியில் 60 வயது நிறைவுற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் துறை சாா்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரம் உள்ள புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் அசல் புத்தகத்தை நேரடியாக முப்படை நலத் துறை அலுவலகத்தில் வருகிற 30- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.