கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக புதுச்சேரியில் சரணடைந்த கருப்பர் கூட்ட யூடியூப் சேனல் நிர்வாகியை, சென்னை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கருப்பர் கூட்டம் என்ற பெயரில் செயல்படும் யூ டியூப் சேனலில் இந்து மதக் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாக பேசி விடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 13 ஆம் தேதி புகாரளித்தனர்.
இது குறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர், கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது வழக்குப் பதிந்து, அந்த யூடியூப் சேனலின் நிர்வாகிகளில் ஒருவராக கருதப்படும் வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன் (49) என்பவரை புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
மேலும், பலரை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த சேனல் நிர்வாகிகளில் ஒருவரான சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ந. சுரேந்தர் (36) என்பவர் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனது நண்பர்களை சந்திக்க வந்தபோது, தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கில் தேடப்பட்டு வருவதை அறிந்து, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.
இது குறித்து புதுச்சேரி காவல்துறையினர், சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அரியாங்குப்பம் காவல்நிலையத்துக்கு வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையிலான காவல்துறையினர், சுரேந்தரை கைது செய்து, சென்னைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.