அரசுக்கான வருமானத்தை தடுக்கும் புதுவை அரசின் கொள்கையை மறுசீரமைப்பது அவசியம் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தியுள்ளார்.
புதுவையில் துணை நிலை ஆளுநராக தான் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆளுநர் கிரண் பேடி பொதுமக்களுக்கு சனிக்கிழமை எழுதியுள்ள திறந்தநிலை கடித விவரம்: புதுவை மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நாளும் ஓர் உயர்ந்த நோக்கத்தை கொண்டு பணி செய்து வருகிறேன். முக்கியமற்ற சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். இருப்பினும் யாராலும் ஆளுநர் மாளிகை குழுவின் பணியை தடுக்க முடியவில்லை. ஆளுநர் மற்றும் ஆளுநர் அலுவலக பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற கடந்த 4 ஆண்டுகளாக செய்த பணிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை வருங்கால சந்ததிகள் பார்த்து அறிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள், பார்வையாளர்கள், பொது அதிகாரிகள், மனுதாரர்கள், நிகழ்வுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், விருந்தினர்கள் உள்ளிட்டோரின் நலனை பாதுகாக்கும் வகையில் ஆளுநர் மாளிகை ஒரு மக்கள் மாளிகையாக மாற்றப்பட்டது என்பது தான் உண்மை. வார இறுதி நாள்களில் கள ஆய்வு மேற்கொண்டது, நீர் நிலைகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது உள்ளிட்ட பணிகளை மறந்துவிட முடியாது. கரோனா பாதிப்பு காரணமாக இவற்று இப்போது தொடர முடியவில்லை.
புதுவைக்கு என்ன தேவை இருக்கிறது, எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்? என்ற கேள்வி இருந்து வருகிறது. என்னை பொருத்தவரை, நிதியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பது தான் முதல் பணி என நான் நம்புகிறேன். எனவே உடனடி நடவடிக்கையாக அரசின் சொந்த வருமானங்களை தடுக்கும் தற்போதைய அரசின் கொள்கைகளை நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மதுபான கடைகளை திறமையான, கவனமுள்ள, கணினிமயமாக்கப்பட்ட நிர்வாகத்தில் ஏலம் விடுவது, கேபிள் வரி, சொத்து வரி, மின் கட்டண நிலுவை ஆகியவற்றை வசூலிப்பது, அரசு கட்டடங்ளுக்கான வாடகை மற்றும் உரிம கட்டணங்களை மறுபரிசீலனை செய்தல், சுற்றுலா சொத்துக்களை தனியார் மயமாக்குவது, பொதுத்துறை நிறுவனங்களை சீர்படுத்துவது தொடர்பாக விஜயன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
விவசாய பொருள்களை சேமித்து வைத்தல், சந்தைப்படுத்துதல், போக்குவரத்து போன்றவை மூலம் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல், மீன் வளர்க்க, கால்நடைகள் வளர்க்க, தேனீ வளர்க்க சுய உதவி குழு பெண்களுக்கு அதிக கடன்களை வழங்குவது, மூலிகை சாகுபடி, புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்குவீட்டு வசதி செய்து தருதல், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவித்தல் உள்ளிட்டவைகளை உடனடியாக செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் இவைகளை செய்ய விருப்பத்துடன் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட பொது அதிகாரிகள் தேவை. அனைத்துக்கும் மேலாக புதுவை மக்களின் நல் வாழ்வு தங்களின் நல்வாழ்வு என்று உணர்பவராக அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஆளுநர் கிரண் பேடி.