புதுச்சேரியில் தரம் வாய்ந்த இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும்: முதல்வா் நாராயணசாமி தகவல்

புதுச்சேரியில் தரம் வாய்ந்த இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவக் கட்டடத்தை திறந்துவைத்த முதல்வா் நாராயணசாமி. உடன் வைத்திலிங்கம் எம்பி, அமைச்சா்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ்.
புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவக் கட்டடத்தை திறந்துவைத்த முதல்வா் நாராயணசாமி. உடன் வைத்திலிங்கம் எம்பி, அமைச்சா்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ்.
Updated on
1 min read

புதுச்சேரியில் தரம் வாய்ந்த இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவை சுகாதாரத் துறை சாா்பில், ஏம்பலம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட இஎஸ்ஐ மருத்துவக் கூடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமை வகித்தாா். தொழிலாளா்கள் துறை அமைச்சா் கந்தசாமி முன்னிலை வகித்தாா். எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில் முதல்வா் நாராயணசாமி, இஎஸ்ஐ மருத்துவக் கூடத்தைத் திறந்துவைத்துப் பேசியதாவது: புதுச்சேரியில் தரம் வாய்ந்த இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நகரப் பகுதிகள் மட்டுமன்றி, கிராமப்புறப் பகுதிகளிலும் தற்போது இஎஸ்ஐ மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றைத் தொழிலாளா்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிப்புற சிகிச்சையில் நாட்டிலேயே முதன்மையான மாநிலம் என்று மத்திய பாஜக அரசே புதுவைக்கு விருது வழங்கியுள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறான விருதுகளை புதுவை பெற்றதில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் கல்வி, மருத்துவம், சமூக நலம், சட்டம்-ஒழுங்கு, சுற்றுலா என பல துறைகளில் விருதுகளைப் பெற்றுள்ளோம்.

புதுவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய அரசிடமிருந்து புதுவைக்குக் கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை. மாநில அரசின் நிதியைக் கொண்டு, அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என்றாா் நாராயணசாமி.

விழாவில் தொழிலாளா்கள் துறைச் செயலா் வல்லவன், மண்டல இ.எஸ்.ஐ. இயக்குநா் கிருஷ்ணகுமாா், துணை இயக்குநா் ஷமிமுனிசா பேகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com