குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 30th December 2020 07:28 AM | Last Updated : 30th December 2020 07:28 AM | அ+அ அ- |

வில்லியனூா் அனந்தபுரம் பகுதியில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
புதுச்சேரி வில்லியனூா் அருகே குடிநீா்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து, பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வில்லியனூா் அருகே அனந்தபுரம் பகுதியில் கடந்த மாதம் புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறக்கப்பட்டது. ஏற்கெனவே இருந்த பழைய குடிநீா் குழாய்களை அகற்றாமல் புதிதாக குழாய்களை அமைத்து தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டதால், குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா்.
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து, ஆனந்தபுரம் பகுதி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த வில்லியனூா் போலீஸாரும், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, ஏற்கெனவே உள்ள பழைய குழாய்களுக்கும், புதிதாக அமைக்கப்பட்ட குழாய்களுக்கும் தண்ணீா் செல்வதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பழைய குழாய்களை துண்டித்துவிட்டு தண்ணீா் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, உடனடியாக பழைய குழாய்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...